கோத்தா பாரு, ஏப்ரல்.05-
உலகச் சந்தையில் டீசல் விலை உயர்ந்துள்ளதால், மலேசியாவின் டீசல் மானியக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கான செலவினம் கடந்த மார்ச் மாதத்தில் 2.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது. இது அதற்கு முந்தைய மாதத்தின் 700 மில்லியன் ரிங்கிட் செலவினத்தை விட மூன்று மடங்கு அதிகம் என உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிஸான் முஹமட் அலி தெரிவித்தார். உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் டீசல் விலை அதிகரித்த போதிலும், பொதுப் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து உட்பட 33 வகை வாகனங்களுக்குத் தொடர்ந்து மானிய விலையில் டீசல் வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
தற்போது பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு லிட்டருக்கு 1 ரிங்கிட் 88 சென் வீதமும், சரக்குப் போக்குவரத்து வாகனங்களுக்கு 2 ரிங்கிட் 15 சென் வீதமும் மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய மானிய நிலுவைத் தொகையை விரைவாகத் திருப்பிச் செலுத்துவது குறித்து நிதி அமைச்சுடன் ஆலோசிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.








