கடந்த ஞாயிற்றுக்கிழமை, தெனோம், கம்பூங் காங்காவாங் பகுதியில், 54 வயதுடைய ஒருவர் தனது மூத்த சகோதரனால் வீட்டில் தயாரிக்கப்பட்ட ‘பகாகு’ வகை நாட்டுத் துப்பாக்கி மூலம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், 57 வயதான அந்த சந்தேக நபர், பின்னர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
காலை சுமார் 8 மணியளவில், நடந்த இச்சம்பவத்தின் போது, உயிரிழந்த நபரின் முதுகுப் பகுதியில் எட்டு துப்பாக்கிச் சூடு காயங்கள் ஏற்பட்டிருந்ததாக தெனோம் மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்மிர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்தை போலீசார் அடைந்த போது, கையில் துப்பாக்கியுடன் சந்தேக நபர் தமது வீட்டினுள் இருந்துள்ளார்.
அவரை கைது செய்ய போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் அது பலனளிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில், போலீசார் ஒருவரை நோக்கி சந்தேக நபர் துப்பாக்கியால் சுட முயன்ற போது, தற்காப்பிற்காக போலீசார் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அஸ்மிர் அப்துல் ரசாக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கானது குற்றவியல் சட்டம் பிரிவு 302, 307 ஆகியவற்றின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.








