கோலாலம்பூர், டிசம்பர்.02-
சீனாவின் ஷாங்காய் மற்றும் கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையானது மிகச் சரியான நேரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மலேசிய சுற்றுலாத் துறை கருதுகின்றது.
Visit Malaysia 2026-ஐ முன்னிட்டு, சீனாவில் இருந்து மலேசியாவிற்கு வருகை புரியும் பயணிகளின் எண்ணிக்கை தற்போது மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலக்கட்டத்தில், சுமார் 3.3 மில்லியன் சீனப் பயணிகள் மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ளதாக மலேசிய சுற்றுலாத் துறையின் துணைத் தலைவர் டத்தோ யியோ சூன் ஹின் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கையானது 27.5 விழுக்காடு அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spring Airlines நிறுவனத்தால் வழங்கப்பட்டு வரும் ஷாங்காய்-கோலாலம்பூர் இடையிலான விமானச் சேவையானது மலேசிய சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்க்கும் என தாம் நம்புவதாக யியோ சூன் ஹின் தெரிவித்துள்ளார்.








