கோலாலம்பூர், டிச.7-
நாட்டின் மூத்த அரசியல் கூட்டணி கட்சியான பாரிசான் நேஷனலின் அடையாளம், மறு கட்டமைக்கப்பட வேண்டும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்களின் அபரிமித ஆதரவுடன் மீண்டும் முழு பலத்துடன் ஒரு வலுவான கூட்டணியாக பாரிசான் நேஷனல் எழுச்சிப்பெறுவதற்கு அதன் வலிமை மறு சீரமைக்கப்பட வேண்டும் என்று அகமட் ஜாஹிட் கேட்டுக்கொண்டார்.
கோலாலம்பூர், உலக வாணிப மையத்தின் மெர்டேக்கா அரங்கில் இன்று நடைபெற்ற பாரிசான் நேஷனல் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் அகமட் ஜாஹிட் தமது பிரதான உரையில் மேற்கண்ட அறைகூவலை விடுத்தார்.
பாரிசான் நேஷனல் உறுப்புக்கட்சித் தலைவர்கள் மற்றும் இதரப் பொறுப்பாளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்ட இந்த பொன்விழா கொண்டாட்டத்தில், பாரிசான் நேஷனலுக்கு மறுபெயரிடுதல், மறுவரையறை செய்தல் மற்றும் மறுசீரமைத்தல் ஆகிய மூன்று அம்சத் திட்டத்தை ஜாஹிட் பட்டியலிட்டு, முன்மொழிந்தார்.
பாரிசான் நேஷனலுக்கு மறுபெயரிடுதல் என்பது தற்போதைய சவால்களுக்கு ஏற்ப தேவையான மாற்றத்தை பிரதிபலிக்க வேண்டும் என்று ஜாஹிட் கேட்டுக்கொண்டார்.
மலேசிய அரசியல் வானில், முழு பலத்துடனுடனும், எழுச்சியுடனும் காலத்தின் அடையாளமாக, அதன் தேவைகளுக்கு ஏற்ப பாரிசான் நேஷனல் பிம்பம் பிரதிபலிக்க வேண்டும், மக்களின் அபரிமித ஆதரவை மீண்டும் பெற வேண்டும்.
அதற்கு, 50 ஆண்டு கால தோற்றத்கைக்கொண்ட பாரிசான் நேஷனலுக்கு மறு உருவம் கொடுப்பது, காலத்தின் கட்டாயமாகும் என்று அம்னோ தலைவருமான ஜாஹிட் வலியுறுத்தினார்.








