நாட்டில் இன்று ஜூன் 23 ஆம் தேதி முதல் ஜூன் 25 தேதி வரை நடைபெறவிருந்த ஆட்சியாளர்கள் மாநாடு திடீரென ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இறுதி நேரத்தில் இந்த மாநாடு ரத்து செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அரச அரியணை தொடர்பாக எழுந்துள்ள கடுமையான சர்ச்சை காரணமாகவே இந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நெகிரி செம்பிலான் அரியணை சர்ச்சையை , நீதிமன்றம் வரை கொண்டு செல்லாமல் இந்த விவகாரத்தை மாநில ஆட்சியாளரே தீர்த்து வைக்க வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் உட்பட ஐந்து மூத்த ஆட்சியாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் நெகிரி செம்பிலான் யாங் டி-பெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர், பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் 5 ஆம் தேதி துங்கு நட்சருதீன் துவாங்கு ஜாஃபர் மாநிலத்தின் புதிய ஆட்சியாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், இந்த அறிவிப்பு சட்டவிரோதமானது என அரண்மனை நிர்வாகம் கூறியுள்ளதுடன், மாநில அரசும் இதனை ஏற்க மறுத்துள்ளது. இதற்கிடையே, ஜூன் 5 அன்று நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றமும் கலைக்கப்படுவதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








