சிபு, பிப்ரவரி.19-
சீனப் புத்தாண்டின் முதல் நாளன்று, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான கேஎல்ஐஏவில் இரண்டு மணி நேரத்திற்குள் 8,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங் தெரிவித்துள்ளார்.
சரவாக், சிபு, பூலாவ் லீ ஹுவா வணிக மையத்தில் நடைபெற்ற தமது சீனப் புத்தாண்டு உபசரிப்பு விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய தியோங், கேஎல்ஐஏ முனையம் 1-இல் சுமார் 6,500 பயணிகளும், முனையம் 2-இல் 1,500 பயணிகளும் வருகை தந்ததாகக் குறிப்பிட்டார்.
"முதல் இரண்டு நாட்களுக்கான ஒட்டுமொத்த புள்ளி விவரங்கள் இன்னும் இறுதிச் செய்யப்படவில்லை, அதிகாரப்பூர்வ தரவுகளுக்காகக் காத்திருக்கிறோம்," என்று அமைச்சர் தியோங் கிங் சிங் கூறினார்.
இந்த வலுவான வருகை எண்ணிக்கை நாடு முழுவதும், குறிப்பாக கோலாலம்பூர் போன்ற முக்கிய நகரங்களில் ஹோட்டல் முன்பதிவுகள் முழுமையாக நிரம்பியிருப்பதைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மலேசிய சுற்றுலத்துறை இன்று விடுத்த அறிக்கையில், பிப்ரவரி 17-ஆம் தேதி சீனப் புத்தாண்டின் முதல் நாளன்று, நாட்டின் முக்கிய நுழைவாயிலான கேஎல்ஐஏவில் காலை 7.00 மணி முதல் 10.30 மணி வரை 32 விமானங்கள் மூலம் மொத்தம் 8,840 பயணிகள் வருகை தந்ததாகத் தெரிவித்துள்ளது.
இந்த அதிகரிப்பு, தீவிரமாக விளம்பரப்படுத்தப்பட்டு வரும் 'விசிட் மலேசியா 2026' பிரச்சாரத்தின் வளர்ந்து வரும் வேகத்தைக் காட்டுகிறது.
ஹரி ராயா பண்டிகைக்குப் பிறகு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சுற்றுலாவை மேம்படுத்த மலேசிய சுற்றுலாத்துறைக்குக் கூடுதல் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் தியோங் கிங் சிங் தெரிவித்தார்.








