கிள்ளான், நவம்பர்.17-
கம்போங் பாப்பான் விவகாரத்தில் பிரதமர் தலையீட வேண்டும் என்று பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர் டோனி லியோங் வலியுறுத்தினார்.
45 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வசித்து வந்த கம்போங் பாப்பான் குடியிருப்பை உடைக்க மேம்பாட்டாளர்கள் போலீஸ் உதவியுடன் முற்றுகையிட்டனர்.

74 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட அப்பகுதியில் 1960 ஆம் ஆண்டுகளில் 700 வீடுகள் இருந்ததாகவும் இன்று அது 83 வீடுகளாகக் குறைந்திருந்தாலும், அங்கே மக்கள் தங்கள் குடும்பங்களுடன் தங்கி இருப்பதாகவும் டோனி செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவித்தார்.
நீதிமன்ற ஆணையை வைத்திருக்கும் தேசிய வங்கியின் மேம்பாட்டாளர் போலீஸ் துணையுடன் அங்கிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வீடுகளை உடைக்க முற்பட்டனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாநில அரசின் பிரநிதிகள் மேம்பாடாளருடன் பேச்சு வார்த்தை தொடர்ந்துக் கொண்டு இருந்த போதிலும், நீதிமன்ற ஆணையைப் பெற்ற மேம்பாட்டாளரின் செயல் கண்டனத்திற்கு உரியது. காரணம் இங்கே வசிக்கும் மக்களுக்கான வாழ்வாதாரம், நஷ்ட ஈட்டுத் தொகை, குறைந்த விலையிலான வீடுகள் போன்ற இன்னும் பல விவகாரங்கள் இன்னும் பேச்சு வாக்கிலேயே இருக்கும் பட்சத்தில் திடீர் என்று மாநில அரசாங்கத்தில் அணுகுமுறையை மதிக்காமல் இத்தகைய முடிவை மேம்பாட்டளர் மேற்கொண்டது மிகப் பெரிய தவறு என்றும் அவர் கூறினார்.

நாங்கள் நீதிமன்ற ஆணையை மதிக்கின்றோம் ஆனால் இன்னும் முழுமையான தீர்வு காணப்படாமல் இருக்கும் விவகாரத்தில் தன்னிச்சையாக மேம்பாட்டாளர் முடிவு எடுத்தது அங்கு குடியிருந்தவர்களின் மத்தியில் பதற்றத்தை எழுப்பியது மட்டும் இன்றி எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் வீடுகளை உடைக்க வந்தால் மக்கள் என்ன செய்வார்கள் என்றும் அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.

எவ்வித உத்தரவாதக் கடிதமும் தராமல் தாங்கள் வாழ்ந்து வந்த பகுதியைச் காலி செய்ய சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள் என்றும் அவர் செய்தியாளர்கள் மத்தியில் கேள்வி எழுப்பினார்.
இவ்விகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சரியான தீர்வை வழங்க அவர் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.








