பெட்டாலிங் ஜேயா, ஜூலை 4-
மனித வள அமைச்சின் கீழ் செயல்படும் மனித வள மேம்பாட்டு நிறுவனமான HRD Corp. (எச்.ஆர்.டி.எப். கோர்ப்) தனது முதலீட்டு நடவடிக்கைகள் குறித்து இயக்குநர் வாரியத்தின் உறுப்பினர்களிடம் தெரிவிக்கவில்லை என்று PAC ( பி.ஏ.சி. ) எனப்படும் தேசிய கணக்காய்வுக் குழு அம்பலப்படுத்தியுள்ளது.
தனது இயக்குநர் வாரியத்தின் உறுப்பினர்களே, முதலீட்டுக்குழுவிலும் உறுப்பினர்களாக இருப்பதால் முதலீட்டு நடவடிக்கை குறித்து அந்த வாரியத்திடம் தெரிவிக்கவில்லை என்று HRD Corp. தனது நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளதாக தேசிய கணக்காய்வுக்குழுவின் தலைவர் மாஸ் எர்மியாடி சம்சுதீன் தெரிவித்துள்ளார்.
எனினும் இது முற்றிலும் தவறாகும் என்பதுடன் 2001 ஆம் ஆண்டு மனித வள மேம்பட்டு சட்டத்திற்கு முரணான செயலாகும் என்று மாஸ் எர்மியாடி குறிப்பிட்டுள்ளார்.
HRD Corp., தனது முதலீட்டு நடவடிக்கைக்குழுவில் மலேசிய பேங்க் நெகாராவின் பிரதிநிதிகள் யாரையும் சேர்த்துக்கொள்ளவில்லை என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக மாஸ் எர்மியாடி கூறினார்.
HRD Corp., தனது முதலீட்டு நடவடிக்கைக்குழுவில் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து பேங்க் நெகாராவின் பிரதிநிதிகள் இல்லாததையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மனித வள மேம்பாட்டு நிறுவனமான HRD Corp., தொழிலாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் ஓர் அரசாங்க ஏஜென்சியே தவிர முதலீட்டு நிறுவனம் அல்ல என்பதையும் மாஸ் எர்மியாடி நினைவுறுத்தியுள்ளார்.
விலை உயரும் என்ற நம்பிக்கையில் லெவி பணத்தை பயன்படுத்தி, பலதரப்பட்ட முதலீட்டு நடவடிக்கையில் HRD Corp ஈடுபட்டு இருப்பது பல்வேறு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
HRD Corp. பின் முதலீடுகள் யாவும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையிலானதாகும். இதனால் அந்த நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பீடு காத்திருப்பதாக மாஸ் எர்மியாடி குறிப்பிட்டுள்ளார்.








