லஞ்ச ஒழிப்புக்கான விசாரணைக்கு தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்கு ஒத்துழைக்கும் நபர்களை மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்- ஆரஞ்சு நிற தடுப்புக் காவல் உடையை அணியச் செய்ய வேண்டிய அவசியமில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு உதவுவதற்காக மட்டுமே தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆரஞ்சு நிற உடையை அணிவிப்பது, அவர்கள் மீது பொதுமக்களிடையே எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கூறினார்.
வழக்கு தொடர வேண்டிய நிலை ஏற்பட்டால், தடுப்புக் காவலில் உள்ளவர்கள் எந்த நிற உடையை அணிய வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிவு செய்யலாம் என்றும் அன்வார் தெரிவித்தார்.
விசாரணைக்கு ஒத்துழைக்கும் நிலையில், ஆரஞ்சு நிற உடையை அணிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர் தெளிவுபடுத்தினார்.
முன்னதாக, 2022ஆம் ஆண்டு, ஜசெக-வின் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் சந்தேக நபர்களுக்கு ஆரஞ்சு நிற உடை அணிவிப்பது தொடர்பில் போலீஸ் மற்றும் எஸ்பிஆர்எம் தெளிவான விதிமுறைகளை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.








