ஷா ஆலாம், ஆகஸ்ட்.26-
மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான யுடிஎம் பயிற்சியாளர் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் உடலில் இரண்டாவது சவப் பரிசோதனை செய்வதற்கு அந்த மாணவரின் உடலைத் தோண்டுவதற்கு ஷா ஆலம் உயர் நீதிமன்றம் இன்று காலையில் உத்தரவிட்டது.
அந்த மாணவரின் 45 வயது தாயார் உம்மு ஹைமான் பீ டௌலாட்கன் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்ற நீதிபதி பூபிண்டர் சிங், இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
போலீஸ் படைத் தலைவர் அல்லது அவரின் அலுவலகத்தைச் சேர்ந்தவர்களின் தீவிர கண்காணிப்புடன் சிலாங்கூர், கம்போங் ரின்சிங்கில் உள்ள முஸ்லிம் கல்லறையிலிருந்து அந்த மாணவரின் உடலைத் தோண்டுவதற்கு நீதிபதி ஆணைப் பிறப்பித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவரின் தாயார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நாட்டின் முன்னணி சவப் பரிசோதனை நிபுணரான டாக்டர் பூபிண்டர் சிங் மற்றும் குடும்பத்தினரால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞரின் மேற்பார்வையில் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சவப் பரிசோதனை நிபுணரின் உதவியுடன் 14 நாட்களுக்குள் இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஜோகூரில் உள்ள உலு திராம் இராணுவப் போர் பயிற்சி மையத்தில் சேமப்படை பயிற்சிப் பிரிவில் ஈடுபட்டு இருந்த 22 வயதுடைய அந்த யுடிஎம் மாணவர், துன்புறுத்தலுக்கு ஆளாகி மரணமுற்று இருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்.
தனது மகனின் உடலில் காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தாயார் உம்மு ஹைமான் போலீசில் புகார் அளித்துள்ளார்.








