நாட்டில் அரசு ஊழியர்களுக்காகச் செயல்படுத்தப்படும் ‘வீட்டிலிருந்தே பணிபுரியும்’ திட்டத்தின் மூலம், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 3 லட்சத்து 34 ஆயிரம் லிட்டர் RON95 ரக பெட்ரோல் சேமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தொடர்பாளர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
சேமிக்கப்பட்டுள்ள பெட்ரோலின் மதிப்பு சுமார் 6 லட்சத்து 78 ஆயிரம் ரிங்கிட்டாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் 15 முதல் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தில், இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 500 அரசு ஊழியர்கள் பதிவு செய்துள்ளனர். உலகளாவிய எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்று டத்தோ ஃபஹ்மி விளக்கினார்.
அரசுத் துறையில் கிடைத்துள்ள இந்த வெற்றியைத் தொடர்ந்து, தனியார் துறையிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் கிடைக்கும் ஒட்டுமொத்த சேமிப்பு குறித்த விபரங்களைச் சேகரிக்குமாறு அரசாங்க தலைமைச் செயலாளர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
மேலும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க நேருக்கு நேர் சந்திப்புகளைத் தவிர்த்து, அதிகமான இணையவழி கூட்டங்களை நடத்துமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியிருப்பதையும் டத்தோ ஃபஹ்மி சுட்டிக்காட்டினார்.








