கடந்த மாதம் தமக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்த பெண்ணின் 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்தை ஒப்புக்கொண்ட 34 வயதான ஹோட்டல் ஊழியருக்கு, தானா மேரா செஷன்ஸ் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 2 பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஜூலை 24-ஆம் தேதி, அச்சிறுமியை தானா மேராவிலுள்ள ஹோட்டல் ஒன்றில், பள்ளியிலிருந்து இடமாற்றம் செய்து தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இதனிடையே, ஹோட்டலிலிருந்து தப்பியோடிய அச்சிறுமியை பொதுமக்கள் மீட்டு தானா மேரா மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் போலீசார், பெசுட்-இல் இருந்த அச்சிறுமியின் தாயை தொடர்புகொண்டு, அவரிடம் சிறுமியை ஒப்படைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீதிபதி ஸுலகிப்லி அப்துல்லா முன்னிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு சிறையில் மன நல ஆலோசனை பெறவும், விடுதலையான பின் 2 ஆண்டுகள் போலீஸ் கண்காணிப்பில் இருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








