கோலாலம்பூர், பிப்ரவரி.24-
அவசரநிலைகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான சந்தர்ப்பங்களில், மலேசியாவில் வாழும் நாடற்ற குழந்தைகளை, அரசாங்கப் பொது மருத்துவமனைகள் ஒருபோதும் கைவிடாது என்று சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் நாடற்ற குழந்தைகள் உட்பட அனைவருக்கும் உரிய சிகிச்சைகள் கிடைக்க சுகாதார அமைச்சு விரும்புவதாகவும் நாடாளுமன்றத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கக் கொள்கையைப் பொறுத்த வரையில், உயிர்களைக் காப்பாற்றுவதும், தேவைப்படுவோருக்கு உரிய சிகிச்சை வழங்குவதும் ஆகும் என்றும் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், 2014-ஆம் ஆண்டு மருத்துவக் கட்டண ஆணையின் படி, மலேசியாவில் குடியுரிமை உள்ளவர்களுக்கும், குடியுரிமை இல்லாதவர்களுக்கும் இடையே, கட்டணங்களில் வேறுபாடு இருக்கும் என்பதை ஸுல்கிஃப்லி சுட்டிக் காட்டியுள்ளார்.
நாடற்றவர்களுக்கு, வெளிநாட்டினருக்கான கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ஸுல்கிஃப்லி தனது எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.








