குளுவாங், ஜனவரி.07-
குளுவாங்கைச் சேர்ந்த 65 வயதான ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர், அந்நிய முதலீட்டு மோசடியில் சிக்கி சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட்டை இழந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அதிக முதலீட்டு லாபத்தைத் தரக்கூடிய திட்டம் என்று வலைத்தளம் ஒன்றில் விளம்பரப்படுத்தப்பட்ட தகவல்களை நம்பிய அந்த நபர், தனது மொத்த சேமிப்பையும் இழந்துள்ளதாக குளுவாங் மாவட்ட உதவி ஆணையர் பாஹ்ரென் முஹமட் நோ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் வரையில், நான்கு வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு, 2 லட்சத்து, 61 ஆயிரத்து 420 ரிங்கிட்டை அவர் பரிமாற்றம் செய்துள்ளார்.
அதன் பின்னர், முதலீடு செய்த தொகையைத் திரும்பப் பெற முயற்சி செய்த போது, மேலும் பணம் செலுத்தும்படி கூறப்பட்டதைத் தொடர்ந்து, தாம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்துள்ளார்.
இந்நிலையில், அவர் அளித்த போலீஸ் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாஹ்ரென் முஹமட் நோ தெரிவித்துள்ளார்.








