இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தன் பகுதியில் கடந்த வியாழக்கிழமை நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மலேசியர், பேட்ரிக் கீ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் கோலாலம்பூர் கெப்பாங் குழுமத்தின் முன்னாள் தோட்ட இயக்குநராக பணியாற்றியவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த தகவலை தங்கா பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பக்ரி ஜமாலுதீன் தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தாம் பேட்ரிக் கீயின் தலைமையின் கீழ் கோலாலம்பூர் கெப்பாங் பெர்ஹாட் நிறுவனத்தில் பணியாற்றியதாக பக்ரி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், அவர் மிகுந்த மரியாதைக்குரிய தலைவர் என்றும், அவரது அர்ப்பணிப்பு, ஞானம் மற்றும் உறுதிப்பாடு, அவருடன் பணியாற்றிய பலரின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் பக்ரி தமது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
மேற்கு கலிமந்தன் மாநிலத்தில் நேற்று வியாழக்கிழமை காலை புறப்பட்ட ‘மேத்யூ ஏர் நுசந்தாரா’ என்ற ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில் அதில் பயணம் செய்த 8 பேரும் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.








