ஜார்ஜ் டவுன், மார்ச் 03-
தஞ்சோங் தோக்கோங் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில், நான்கு ஒற்றை தள குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகின.
தீ பற்றியதை அறிந்தவுடன், அவற்றில் வசித்து வந்த 23 குடியிருப்பாளர்கள், உடுத்த ஆடைகளை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி உயிர் தப்பியுள்ளனர்.
இத்தீவிபத்து குறித்து இன்று அதிகாலை 3.14 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
அதிகாலை 6 மணி வரையில் தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றதாகவும், மற்ற வீடுகளில் தீ பரவாமல் தடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை என்பதையும் ஜான் உறுதிப்படுத்தியுள்ளார்.








