கிள்ளான், செப்டம்பர்.19-
போலீஸ் சோதனையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்த மூன்று ஆடவர்கள், 5 ரோந்து போலீஸ் கார்கள் மூலம் விரட்டிச் சென்று வளைத்துப் பிடிக்கப்பட்டனர்.
அந்த மூவரும், கிள்ளான், பண்டார் செந்தோசாவில் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரம்லி காசா தெரிவித்தார்.
அந்த மூவரும் பயணித்த கறுப்பு நிற புரோட்டோன் வாஜா கார், நேற்று இரவு 11.15 மணியளவில் கிள்ளான், ஜாலான் கெபுனில் சந்தேகத்திற்கு இடமாக சென்று கொண்டிருந்த வேளையில் அதனைத் தடுத்து நிறுத்த ரோந்துப் போலீசார் முயற்சித்தனர்.
எனினும் அவர்கள் தங்கள் காரை நிறுத்துவது போல் பாவனை செய்து, பின்னர் மின்னல் வேகத்தில் அப்பகுதியிலிருந்து தப்பி விட்டனர்.
அந்த மூவரைத் தேடும் பணியில் ஐந்து ரோந்துப் போலீஸ் கார்கள் ஈடுபட்டு இருந்த வேளையில் அவர்கள் பின்னர் பண்டார் செந்தோசா, லோரோங் டத்தோ யூசோஃப் ஷா பண்டார் என்ற இடத்தில் பிடிபட்டதாக ஏசிபி ரம்லி காசா தெரிவித்தார்.
அவர்களின் காரைச் சோதனையிட்டதில் நீண்ட வெட்டுக்கத்தி, கையுறைகள் முதலிய பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததாக அவர் மேலும் கூறினார்.








