2024ஆம் ஆண்டு பொது சுகாதாரத்தை முன்னிறுத்தும் புகைபிடித்தல் பொருட்கள் கட்டுப்பாடு சட்டத்திற்கான விதிமுறைகள் மற்றும் அமலாக்கம் குறித்த இறுதி வரைவை, சுகாதார அமைச்சின் சட்ட ஆலோசகர் தற்போது ஆராய்ந்து வருவதாக, சுகாதார அமைச்சர் டத்தோ செரி டுசுல்கெஃப்லி அஹ்மத் தெரிவித்தார்.
அந்த வரைவு ஆராய்ந்து, இறுதி செய்த பிறகு, அதனை அமலாக்கம் செய்வதற்கு, சட்டத்துறை தலைவரின் அலுவலகத்திடமிருந்து அங்கீகாரம் பெறப்படும் என்றாரவர்.
அங்கீகாரத்தைப் பெற்ற பின், சம்பந்தப்பட்ட வரைவு குறித்து, புகையிலை தடுப்பு தொடர்பான அனைத்து அரசு சாரா அமைப்புகளுக்கும் விளக்கம் அளிக்கப்படும்.
அச்சட்டம் சுமூகமாக அமலாக்கம் காண்பதை உறுதிபடுத்த, மாநில சுகாதார துறை, ஊராட்சித் துறை முதலானோருடன் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி தொடங்கி மே மாதம் 23ஆம் தேதி வரையில் சுகாதார அமைச்சு, பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக, டுசுல்கெஃப்லி அஹ்மத் கூறினார்.
புகைபிடித்தல் பொருட்கள் கட்டுப்பாடு சட்டம், புகையிலை பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் தடை விதிக்கின்றது.
வயது குறைந்த சிறார்களுக்கு, புகையிலை சார்ந்த பொருட்கள் அல்லது புகையிலை மாற்று பொருட்கள் அல்லது அது தொடர்பான சேவைகளை வழங்கும் நடவடிக்கைகளுக்கும் அச்சட்டம் தடை விதிக்க வகை செய்யவுள்ளது.








