கோலாலம்பூர், ஆகஸ்ட்.30-
ஜோகூர், ஸ்கூடாய், மலேசிய தொழிற்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பலாப்ஸ் (Palapes) பயிற்சியாளர் ஷம்சுல் ஹரிஸ் ஷம்சுடின் உடலில் இரண்டாவது சவப் பரிசோதனை, இன்று காலையில் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் தொடங்கியது.
நாட்டின் முன்னணி சவப் பரிசோதனை தடயவியல் நிபுணர் டத்தோ ஶ்ரீ டாக்டர் புபிந்தர் சிங் மற்றும் அந்த மாணவனின் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் காலை 9 மணிக்கு சவப் பரிசோதனை தொடங்கியதாக அந்த மாணவனின் குடும்ப வழக்கறிஞர் டத்தோ நரான் சிங் அரா சிங் தெரிவித்தார்.
சவப் பரிசோதனை முடிவுற அதிக நேரம் ஆகலாம் என்று கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ நரான் சிங் மேலும் கூறினார்.
சவப் பரிசோதனை முடிவுற்றதும் அந்த மாணவனின் உடல் மீண்டும் நல்லடக்கம் செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார். 22 வயதுடைய அந்தப் பயிற்சி மாணவன் துன்புறுத்தலுக்கு ஆளாகி, மரணமுற்றதாக அவரின் குடும்பத்தினர் சந்தேகித்ததைத் தொடர்ந்து அந்த மாணவனின் உடலைக் கல்லறையிலிருந்து தோண்டுவதற்கு ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.








