கோலாலம்பூர், மார்ச்.01-
கோலாலம்பூர், பிபிஆர் கம்போங் முஹிபா அடுக்ககம் 10-வது மாடி வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், நான்கு வயது சிறுவன் ஒருவன் உடல் கருகி உயிரிழந்தான். இன்று மதியம் 2.59 மணியளவில் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, ஶ்ரீ பெட்டாலிங், புக்கிட் ஜாலில் ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு – மீட்புப் படை செயல்பாட்டுப் பிரிவு அதிகாரி கமாண்டர் முஹமட் அஸிஸி அப்துல்லா தெரிவித்தார்.
அந்த வீட்டின் ஓர் அறைக்குள் சிறுவன் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டதாகவும், விபத்தின் போது வீட்டின் 80 விழுக்காட்டுப் பகுதி சேதமடைந்துள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். சிறுவனின் உடல் மேலதிக நடவடிக்கைக்காகக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.








