அடை மழையினால் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கிளந்தான் மாநிலத்தின் வெள்ள நிலைமையை பார்வையிடுதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாளை வியாழக்கிழமை அந்த கிழக்கு கரை மாநிலத்திற்கு வருகை மேற்கொள்ளவிருக்கிறார்.
தாய்லாந்து பிரதமர் ஸ்ரெதா தவிசினை புகெட் தீவில் சந்தித்தப் பின்னர் பிரதமர் அன்வார் தமது முகநூலில் இவ்விவரத்தை வெளியிட்டுள்ளார்.
கரைபுரண்டோடும் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கிளந்தான் மாநில மக்களை நேரில் சந்தித்து, நிலவரத்தை பார்வையிடப் போவதாக பிரதமர் தெரிவித்தார்.
கிளந்தானில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தினால் இன்று காலை வரையில் 5,510 குடும்பங்களைச் சேர்ந்த 17,466 பேர் நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








