ஷா ஆலாம், பிப்ரவரி.10-
சிலாங்கூர் மாநிலத்தின் எந்தவொரு மாவட்டத்திலும் பன்றி வளர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தாம் அனுமதி வழங்கப் போவதில்லை என்று சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா இன்று அறிவித்துள்ளார்.
பன்றிக் கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் ஆற்று நீர் ஆதாரங்கள் மாசுபடுவது போன்ற சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சிலாங்கூர் அரண்மனை அலுவலகம் முகநூலில் பதிவிட்டுள்ளது.
சிலாங்கூரில் உள்ள முஸ்லிமல்லாதவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய, பன்றி வளர்ப்பிற்குப் பதிலாக வெளிநாடுகளில் இருந்து பன்றி இறைச்சியை இறக்குமதி செய்வதற்கான உரிமங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று சுல்தான் யோசனை தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி, சமூக அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் இந்த பன்றி வளர்ப்புப் பிரச்சினைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சிலாங்கூரில் கடந்த சில வாரங்களாக பன்றி வளர்ப்பு என்பது அரசியல் ரீதியாக உணர்வுப்பூர்வமான விஷயமாக மாறியுள்ளது. குறிப்பாக, கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து குடியிருப்பாளர்கள் எழுப்பிய புகார்களைத் தொடர்ந்து, உலு சிலாங்கூர், புக்கிட் தாகர் பகுதியில் முன்மொழியப்பட்ட பன்றி வளர்ப்புத் திட்டம் மக்களின் பலத்த எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து சுல்தான் இந்தத் கருத்தை வெளியிட்டுள்ளார்.








