ஷா ஆலாம், பிப்ரவரி.25-
ரவாங், புக்கிட் செந்தோசாவில் நேற்று நடந்த கலவரம் ஒன்றில், தொடர்புடையதாக நம்பப்படும் 6 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இரு புகார்களையடுத்து, 18 வயது முதல் 49 வயதுடைய அந்த 6 பேரும் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்துள்ளார்.
இரு குடும்பத்தினரிடையே எழுந்த தகராறு முற்றிய நிலையில், அது கலவரமாக வெடித்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், குற்றவியல் சட்டம், பிரிவு 148-இன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இக்கலவரமானது முற்றிலும் இரு குடும்பத்தினரிடையே எழுந்த தனிப்பட்ட மோதல் காரணமானது என்றும், இன விவகாரமோ அல்லது குண்டர் கும்பல் பிரச்சினையோ அல்ல என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சமூக ஊடகங்களில் நேற்று மாலை 4.30 மணியளவில், இச்சம்பவம் தொடர்பான காணொளி பரவியதையடுத்து, உடனடியாக இக்கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ஷாஸெலி தெரிவித்துள்ளார்.








