கோலாலம்பூர், பிப்.24-
நாட்டின் 16 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஸ்ரீம் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில் அடுத்து நாட்டை வழி நடத்தக்கூடிய 11 ஆவது பிரதமர் யார் என்பது இன்னமும் புதிராகவும், விடை காண முடியாத நிலையிலும் இருப்பதாக மலேசியாவிற்கான தூதர் பதவியை முடித்துக்கொண்டு அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியுள்ள முன்னாள் அமைச்சர் டத்தோஶ்ரீ முகமட் நஸ்ரி அப்துல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு தமது முழு ஆதரவை நல்குவதாக அறிவித்துள்ள மூத்த அரசியல்வாதியான நஸ்ரி, அடுத்த பொதுத் தேர்தலுக்கு பிறகு அன்வாரை தவிர வேறு யாரும் பிரதமர் பதவிக்கு அடையாளம் காணப்படவில்லை என்பதை திட்டவட்டமாக கூறினார்.
எனவே 16 ஆவது பொதுத்தேர்தலுக்கு பிறகு புத்ராஜெயாவில் பிரதமர் பதவியை பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் தற்போது தாம் தீவிர கவனம் செலுத்தி வருவதாக பேரா மாநிலத்தில் பாடாங் ரேங்காஸ் நாடாளுமன்றத் தொகுதியை 6 தவணைக்காலம் தற்காத்துக் கொண்டவரான நஸ்ரி குறிப்பிட்டார்.
அன்வாரை தவிர மற்ற பிரதமர் வேட்பாளர் இல்லாதது குறித்து தாம் மிகுந்த அச்சம் கொள்வதாக அரசியல் விவகாரங்களை துல்லியமாகவும், தைரியமாகவும் கணிக்கக்கூடியவரான அம்னோ முன்னாள் உச்சமன்ற உறுப்பினரான நஸ்ரி தமது கவலையை தெரிவித்துள்ளார்.







