ஜாசின், பிப்ரவரி.27-
மலாக்கா, ஜாசின் அருகே உள்ள ஜாலான் செர்காம்-பெம்பான் சாலையில் நேற்று மாலை இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இருவர் உயிரிழந்தனர்.
மாலை சுமார் 6.50 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் 33 வயதுடைய ஓர் ஆண் மற்றும் 74 வயதுடைய மூதாட்டி ஆகியோர் உயிரிழந்ததாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் லீ ராபர்ட் தெரிவித்தார்.
விபத்தின் போது, 33 வயது நபர் ஓட்டி வந்த செடான் ரகக் கார் பெம்பானில் இருந்து செர்க்காம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்புற வழித்தடத்திற்குள் நுழைந்தது.
அப்போது செர்க்காம் நோக்கி வந்து கொண்டிருந்த மற்றொரு செடான் கார் மீது அது பலமாக மோதியது. இரண்டாவது காரை 44 வயது நபர் ஓட்டி வந்த நிலையில், அதில் அவரது தாயார் மற்றும் 40 வயதுடைய சகோதரரும் பயணித்தனர்.
விபத்தின் தீவிரத்தால் முதல் காரை ஓட்டி வந்த 33 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரண்டாவது காரில் இருந்த 74 வயது மூதாட்டியும் உயிரிழந்தார்.
மேலும், இரண்டாவது காரை ஓட்டி வந்தவருக்கு கை மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டன, அவரது சகோதரருக்கு நெஞ்சுப் பகுதியில் காயம் ஏற்பட்டது என்று அந்த போலீஸ் அதிகாரி விளக்கினார்.








