கோலாலம்பூர், பிப்ரவரி.28-
மலேசியாவிலிருந்து டோஹா மற்றும் ஜெடா நோக்கிப் பயணித்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானங்கள், வான்வழிப் பாதையில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் கோலாலம்பூருக்கே திருப்பி விடப்பட்டன.
இது குறித்து மலேசிய ஏர்லைன்ஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூரிலிருந்து டோஹா நோக்கிச் சென்ற MH160 மற்றும் ஜெடா நோக்கிச் சென்ற MH156 ஆகிய விமானங்கள் நடுவானில் இருந்த போது, குறிப்பிட்ட வான்வழிப் பகுதியில் பாதுகாப்பு அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, பதற்றம், மோதல் பகுதிகளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி, MH160 விமானம் கோலாலம்பூருக்குத் திரும்பியது. MH156 விமானம் முதலில் சென்னைக்குத் திருப்பி விடப்பட்டு, பின்னர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்தது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று விமான ஏற்பாடுகள் மற்றும் தேவைப்பட்டவர்களுக்குத் தங்குமிட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. மலேசிய ஏர்லைன்ஸ் நடப்புச் சூழலைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், பயணிகளின் பாதுகாப்பிற்கே தாங்கள் முன்னுரிமை அளிப்பதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.








