இந்நாட்டில் தமிழ், சீன தாய்மொழிப்பள்ளிகள் செயல்பாடும், போதனா மொழியாக தாய்மொழிகள் பயன்படுத்தப்படுவதும் அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது என்று அப்பீல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து இரண்டு மலாய் அமைப்புகள், கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன.
தமிழ், சீன தாய்மொழி பள்ளிகளின் செயல்பாடு, அரசமைப்பு சட்டத்திற்கு முரணானது என்று அறிவிக்கக் கோரி, அவ்விரு மலாய் அமைப்புகளும் இறுதி கட்ட முயற்சியில் இறங்கியுள்ளன.
மாபிம் எனப்படும் மஜ்லிஸ் பெம்பங்ஙுனான் பென்டிடிக்கான் இஸ்லாம் மலேசியா மற்றும் கபெனா எனப்படும் காபுங்ஙான் பெர்சத்துவான் பெனுலிஸ் நேஷ்னல் ஆகிய இரு அமைப்புகள், அப்பீல் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கடந்த செவ்வாய்க்கிழமை கூட்டரசு நீதிமன்றத்தில் தங்கள் மேல்முறையீட்டு மனுவை சமர்ப்பித்துள்ளன.
கடந்த நவம்பர் 23 ஆம் தேதி தாய்மொழிப்பள்ளிகளுக்கு சாதகமாக அப்பீல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரும் தங்களின் மேல்முறையீட்டை கூட்டரசு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று கோரி இவ்விரு மலாய் அ மைப்புகளும் தங்களின் மேல்முறையீட்டில் கேட்டுக்கொண்டுள்ளன.
இந்த மேல்முறையீட்டில், இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வழக்கு தொடுத்திருந்த இதர இரண்டு வாதிகளான இஸ்மா எனப்படும் இக்காத்தான் முஸ்லிமின் மலேசியா மற்றும் I-Guru ( ஐ.குரு ) எனப்படும் இக்காத்தான் குரு முஸ்லிம் மலேசியா சம்பந்தப்படவில்லை.
இம்முறை அரசமைப்பு சட்டத்தை மேற்கோள்காட்டி கூட்டரசு நீதிமன்றத்தில் தாங்கள் ஐந்து முக்கிய கேள்விகளை முன் வைத்து இருப்பதாக சம்பந்தப்பட்ட தரப்பினர் சார்பில் ஆஜராகியுள்ள அமெல்டா ஃபுவாட் அபி வழக்கறிஞர் நிறுவனம் தெரிவித்துள்ளது.








