கோலாலம்பூர், செப்டம்பர்.24-
கொலை, கொள்ளை, இடத்தைக் கைப்பற்றுதல் முதலிய திட்டமிட்டக் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் இரண்டு கிரிமினல் கும்பல்களைப் போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி தேதி சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு மற்றும் பேரா ஆகிய நான்கு மாநிலங்களில் போலீசார் தொடங்கிய ஓப் ஜேக் ஸ்பாரோவ் சோதனை நடவடிக்கையில் 17 பேர் கைது செய்யப்பட்டது மூலம் பலவந்தமான கடுங்குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் இந்த இரு கிரிமினல் கும்பல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
உள்ளூரைச் சேர்ந்த ஒரு நபரின் தலைமையில் 33 பேருடன் கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து இந்த கிரிமினல் கும்பல்கள், தீவிரமாகச் செயல்பட்டு வந்துள்ளன.
கொலை, அபாயகரமான ஆயுதங்களைப் பயன்படுத்தி காயம் விளைவித்தல், கூட்டாகச் சேர்ந்து கொள்ளையடித்தல், தீ வைத்து நாச வேலைகளில் ஈடுபடுதல் முதலிய குற்றச்செயல்களில் இந்த கும்பல்கள் ஈடுபட்டு வந்துள்ளன.
ஒவ்வோர் இடத்தைப் பிடித்து, அங்கே தாங்களே அதிகாரம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கும்பல்கள் செயல்பட்டு வந்துள்ளன. இவ்வாண்டு முற்பகுதியில் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்ட காணொளியான கிள்ளான், தாமான் செந்தோசாவில் ஒரு கடையின் முன் இரு ஆடவர்கள், ஒருவரை ஆயுதத்தினால் சரமாரியாகத் தாக்கி மரணம் விளைவிக்கப்பட்ட சம்பவத்தில் இந்தக் கும்பல்கள் சம்பந்தப்பட்டுள்ளன என்று ஐஜிபி குறிப்பிட்டார்.
இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் சிஐடி இயக்குநர் டத்தோ குமார் முத்துவேலுவுடன் இணைந்து நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இதனைத் தெரிவித்தார்.
ஓப் ஜேக் ஸ்பரோவ் சோதனை நடவடிக்கையை, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு மற்றும் பேரா ஆகிய மாநில போலீஸ் தலைமையகங்களின் ஒத்துழைப்புடன் புக்கிட் அமான் மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
பிடிபட்ட இந்த 17 பேரும், 2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்புச் சட்டமான சொஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஐஜிபி மேலும் தெரிவித்தார்.








