பினாங்கில் சீன கல்லறை ஒன்றில் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக 12 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தம்பதியரை ஜார்ஜ் டவுன் உயர் நீதிமன்றம் இன்று விடுவித்தது.
கடந்த மார்ச் 22-ஆம் தேதி, பத்து காந்தோங் சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக 58 வயது எம். ஜெகதீசன் மற்றும் 37 வயது ஹலிலா அபு பக்கர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கில், அவர்களுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 12 மாத சிறைத் தண்டனை விதித்தது.
அந்த நபருக்கும், பெண்ணுக்கும் விதிக்கப்பட்ட தண்டனை அதிக பட்சமானது எனக்கூறி, 12 மாத சிறைத் தண்டனையை எதிர்த்து தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் அந்த தம்பதியர் புரிந்த குற்றத்தை உயர் நீதிமன்ற நீதிபதி ரோஃபியா முகமது உறுதி செய்தார்.
எனினும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட 12 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்து, அவர்கள் கைது செய்யப்பட்ட தினமான மார்ச் 23 ஆம் தேதி முதல் இன்று வரை 28 நாட்கள் சிறையில் இருந்தது, போதுமான தண்டனையாக கருதி அவ்விருவரையும் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இருவருக்கும் தண்டனை குறைக்கப்பட்டது குறித்து மனநிறைவு தெரிவித்த அவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டத்தோ நரான் சிங், "குற்றச்சாட்டை நாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால் வழங்கப்பட்ட தண்டனை மிக அதிகமாக இருந்ததால் தீர்ப்பை சீராய்வு செய்ய கோரினோம். தற்போது குறைந்தபட்ச தண்டனையுடன் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.








