கோலாலம்பூர், ஆகஸ்ட்.04-
அம்பாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மலேசிய கலைத்துறையின் மூத்த நகைச்சுவை நடிகரான 61 வயது சத்யாவை, தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

கடந்த திங்கட்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சத்யா, கால் விரல் பகுதியில் நடந்த சிறிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு இன்று ஆகஸ்ட் 4 ஆம் தேதி வீடு திரும்பினார். தொடர்ந்து சில கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"நான் இன்னும் நலமாக இருக்கிறேன். இன்னும் சில கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். முதலில் வீடு திரும்பியதும் எனது பேரக் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட வேண்டும்” என நகைச்சுவையாகப் பேசினார்.

கடந்த வருடம் ஜூலை மாதம் திடீர் பக்கவாதத்தால் அவர் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
"தனது கலைத்துறை பணியில் தற்போது தற்காலிகமாக ஈடுபடாமல் இருந்தாலும், மன உறுதியோடு சத்யா இருக்கிறார். விரைவில் அவர் நலம் பெற்று வர நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.” என கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ தெரிவித்தார்.

மலேசிய தேசியத் திரைப்பட நிறுவனமான FINAS (பினாஸ்) ஏற்பாடு செய்த கலைஞர்களுக்கான நலத் திட்ட வருகையின் கீழ் சத்யாவுக்கு நலத் தொகையும், பழ வகைகள் கொண்ட கூடை ஒன்றையும் துணையமைச்சர் வழங்கினார்.
இந்த நலத் திட்டத்திலிருந்து உதவி பெற விரும்பும் மலேசியக் கலைஞர்கள், FINAS நலக் குழுவை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என தியோ தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “கடந்த ஜூலை 31 வரை, பினாஸ் எதிர்பார்த்த 100 இலக்கைத் தாண்டி, 112 கலைஞர்களுக்கு இந்த சிறப்பு உதவியை வழங்கியுள்ளது,” என்றார்.
முன்னதாக, கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி, துணையமைச்சர் தலைநகரிலுள்ள நடிகர் சத்யாவின் வீட்டில் நேரில் சந்தித்து, சில உதவிகளை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
(








