பெட்டாலிங் ஜெயா, மே 24-
நாட்டில் தமிழ் மற்றும் சீன தாய்மொழிப்பள்ளிகளின் நிலையை பாதுகாப்பதிலும், தற்காப்பதிலும் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக்- உறுதியான நிலைப்பாட்டைக்கொண்டு இருப்பதாக கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ வெகுவாக பாராட்டியுள்ளார்.
ஃபத்லினா சிடெக்- தலைமையின் கீழ் தமிழ் மற்றும் சீன தாய்மொழிப்பள்ளிகளின் தேவைகளை அமைச்சு புறக்கணிக்காமல் நிறைவான சேவையை வழங்கி வருவதாக துணை அமைச்சர் வோங் புகழாரம் சூட்டினார்.
மலேசியாவில் தற்போது ஒரு கல்வி அமைச்சர் இருக்கிறார். அவர் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தாய்மொழிப்பள்ளிகளை தற்காப்பதிலும், அவற்றின் தேவை அறிந்து தனது ஆதரவை நல்குவதிலும் முனைப்புக்காட்டி வருவதால் தாய்மொழிப்பள்ளிகள் நிலை குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்று வோங் தெரிவித்தார்.
தாய்மொழிப்பள்ளிகளின் நிலையை ஒற்றுமை அரசாங்கம் தொடர்ந்து பாதுகாக்கும், தற்காக்கும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகம் வேண்டாம் என்று நேற்றிரவு நடைபெற்ற சீனப்பள்ளிகளுக்கு நிதி திரட்டும் நிகழ்வான 2024 டைகர் சின் செவ் நிகழ்வில் உரையாற்றுகையில் Wong மேற்கண்டவாறு கூறினார்.








