ஷா ஆலமுக்கு அருகே புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலையான என்கேவிஇ. யில், பெரிய கட்டமைப்பு ஒன்று இடிந்து விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டின் முக்கிய விரைவுச்சாலைகளில் உள்ள அபாயகரமான கட்டமைப்புகளுக்கு உடனடி பாதுகாப்புத் தணிக்கை நடத்த வேண்டும் என சாலைப் பாதுகாப்பு நிபுணர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் நிறுவனர் ஜமில் மனான் சுப்ரி கூறுகையில் சாலையோரம் அல்லது வாகனப் போக்குவரத்துக்கு மேலே அமைந்துள்ள விளம்பரப் பலகைகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் முழுமையாகப் பரிசோதிக்கப்பட வேண்டும் என்றார்.
அடித்தளம், ஆணிகள், வெல்டிங், தாங்கு சட்டங்கள் மட்டுமின்றி, துருப்பிடித்தல், அதிர்வு, கட்டமைப்பின் சோர்வு மற்றும் பலத்த காற்றைத் தாங்கும் திறன் ஆகியவையும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஒவ்வொரு உயர் அபாய கட்டமைப்புக்கும் கட்டாய காலமுறை ஆய்வு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நேற்று இரவு என்கேவிஇயின் ஷா ஆலம் அருகிலான வடக்கு நோக்கிய அனைத்து தடங்களும் கட்டமைப்பு இடிந்து விழுந்ததால் மூடப்பட்டு, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.








