மலேசியா மற்றும் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களுக்கு மூடா கட்சியின் தேசிய உதவித் தலைவர் டாக்டர் ஆர். சிவபிரகாஷ் தனது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
புத்தாண்டு என்பது வெறும் நாட்காட்டி மாற்றம் மட்டுமல்ல; இது புதிய இலக்குகளை நிர்ணயிக்கவும், சமூக ஒற்றுமையை வலுப்படுத்தவும், அனைவருக்கும் சமமான எதிர்காலத்தை உருவாக்கவும் கிடைத்த ஒரு வாய்ப்பாகும் என்று டாக்டர் சிவபிரகாஷ் குறிப்பிட்டார்.
மலேசியா போன்ற பல்லின நாட்டில், சித்திரைப் புத்தாண்டு போன்ற கலாச்சாரக் கொண்டாட்டங்களே நமது வலிமையாகும். தமிழ்ச் சமூகத்தின் அடிப்படை விழுமியங்களான குடும்பப் பிணைப்பு, கல்வி, கடின உழைப்பு மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவை நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்க வேண்டும்.
இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் செழிப்பைக் கொண்டுவருவதோடு, குறிப்பாக இளைய தலைமுறைக்கு விரிவான கல்வி வாய்ப்புகளை வழங்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் யாரும் பின்தங்கிவிடக்கூடாது என்பதே தமது இலட்சியமாகும்.
அனைத்து தமிழ் மக்களுக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என டாக்டர் சிவபிரகாஷ் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.








