Jul 6, 2026
Thisaigal NewsYouTube
டத்தோஸ்ரீ கோ.பழனிவேலு: இரங்கல் செய்தி
தற்போதைய செய்திகள்

டத்தோஸ்ரீ கோ.பழனிவேலு: இரங்கல் செய்தி

Share:

கோலாலம்பூர், ஜூன்.18-

முன்னாள் ம.இ.கா.வின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ கோ.பழனிவேலுவின் மறைவுச் செய்தி வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்ட மஇகா முன்னாள் உதவித் தலைவர் டான்ஸ்ரீ க.குமரன், அவரது பிரிவால் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினருக்கும் சுற்றத்தினருக்கும் தமது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

ம.இ.கா.வின் எட்டாவது தலைவராகக் குறுகிய காலமே பொறுப்பில் இருந்த காலத்தில் கட்சியை நடத்துவதில் பல வழக்குகளையும், சர்ச்சைகளையும், சவால்களையும் எதிர்நோக்கி கட்சியை நடத்தியவர் டத்தோஸ்ரீ கோ.பழனிவேலு.

தமது இருபதாம் அகவையில் பினாங்கு ம.இ.கா. ஜுலுத்தோங் கிளையில் அடியெடுத்து வைத்த இவர், துன். ச.சாமிவேலுவின் ஊடகச் செயலாளரா பொறுப்பேற்ற பின் அவருடைய நம்பிக்கைக்குரிய ஒருவராக வளரத் தொடங்கினார். அரசியலிலும் அரசாங்கத்திலும் பல பொறுப்புகளும் பதவிகளும் அவரைத் தேடி வந்தன.

அரசாங்கத்தில், நாடாளுமன்றச் செயலாளர், துணை அமைச்சர், அமைச்சர் என்ற பொறுப்புகளில் இருந்துள்ளார். இவர் அமைச்சரவையில் இருந்தபோது தான், இந்தியர்களுக்கான சீட் திட்டம் உருவாக்கப்பட்டது என்பது வரலாற்றுப் பதிவாகும் என்று குறிப்பிட்ட டான்ஸ்ரீ குமரன், இத்திட்டமே பின்னாளில் மலேசிய இந்தியர் பொருளாதார உருமாற்றுத் திட்டம் உருவாகப் பிள்ளையார் சுழி போட்டது.

ம.இ.கா. தலைமைப் பொறுப்பினைக் குறுகிய காலமே ஏற்றிருந்தவர், ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டு ஆரவாரமில்லாமல் அரசியல் நடத்தியவர் . அரசியலிலிருந்து ஓய்வு பெற்றத் தம்மை அழைத்து, ம.இ.கா. தேசிய பேரவையின் சபாநாயகராகப் பணியாற்ற கொடுத்த வாய்ப்பை நன்றியுடன் நினைவு கூர்வதாகக் குறிப்பிட்ட டான்ஶ்ரீ குமரன் அவரது ஆன்மா அமைதியுற இறையருளைப் போற்றுவதாக குறிப்பிட்டார்.

Related News