கோலாலம்பூர், செப்டம்பர்.06-
மூன்று மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் காணாமல் போன பிரிட்டிஷ் பிரஜை டேவிட் பாலிசோங், மனிதக் கடத்தலுக்கு ஆளாகியிருக்கலாம் என மலேசிய அனைத்துலக மனிதநேய அமைப்பு தெரிவித்துள்ளது.
எம்எச்ஓ என்றழைக்கப்படும் அம்மனித நேய அமைப்பின் பொதுச் செயலாளர் டத்தோ ஹிஷாமுடின் ஹாஷிம் இது குறித்து கூறுகையில், 17 வயது டேவிட் பாலிசோங்கின் நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்க்கும் போது அது மோசடிக் கும்பலின் செயல்முறையாகத் தெரிகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவில் தான் நலமாக இருப்பதாகவும், தன்னை யாரும் தேட வேண்டாம் என்றும் பாலிசோங் தனது குடும்பத்தினருக்கு அனுப்பிய மின்னஞ்சலைப் பார்க்கும் போது, இது மோசடிக் கும்பலின் வேலை தான் என அப்பட்டமாகத் தெரிவதாகவும் ஹிஷாமுடின் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.








