பேரா, பத்து காஜா வட்டாரத்தில் அரசு மற்றும் தனியார் நிலங்களில் பல தசாப்தங்களாக அமைந்துள்ள ஐந்து இந்து ஆலயங்களின் நிலப் பிரச்சினைக்கு, பேராக் மாநில அரசு 3 ஏக்கர் மாற்று நில ஒதுக்கீட்டுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க நிரந்தரத் தீர்வை எட்டியுள்ளது.
பூசிங் அருகே உள்ள பாப்பான் பிரதான சாலையோரத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிலத்தில், ஒவ்வொரு ஆலயத்திற்கும் தனித்தனி நிலப்பகுதியுடன் அதிகாரப்பூர்வ நிலப் பட்டா வழங்கப்படும் என்று பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அந்த கோவில்களின் விபரம் வருமாறு:
• தேவகாளி பைரவர் கோயிலுக்கு 12,000 சதுர அடி நிலம்,
• ஸ்ரீ மாகாளியம்மன் கோயிலுக்கு 11,000 சதுர அடி நிலம்,
• பேச்சியாயி அம்மன் கோயிலுக்கு 2,500 – 3,500 சதுர அடி நிலம்,
• கோவில் ஸ்ரீ மகா மாரியம்மன் (2,500 – 3,500 சதுர அடி நிலம்,

ஆகிய நான்கு ஆலயங்களின் நிர்வாகங்கள் புதிய இடத்திற்கு மாற முழுச் சம்மதம் தெரிவித்துள்ளன. இதன் மூலம் இந்த ஆலயங்கள் எதிர்காலத்தில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித அச்சமும் இன்றி சட்டப்பூர்வமாக இயங்கும் நிலை உருவாகியுள்ளது. அனைத்து ஆலயங்களும் ஒரே வளாகத்தில் அமைவதால், திருவிழாக்கள் மற்றும் ஊர்வலங்களை இனி பாதுகாப்பாக நடத்த முடியும் என்று டத்தோ சிவநேசன் விளக்கினார்.

எனினும், ஜாலான் பூசிங்கில் உள்ள ஸ்ரீ மதுரை வீரன் ஆலய நிர்வாகம் தற்போதைய இடத்திலேயே தொடர விரும்புவதாகக் கூறி, இந்த மாற்று நிலத் திட்டத்தை ஏற்க மறுத்துள்ளது.
இது குறித்து மேலும் பேசிய டத்தோ சிவநேசன், "மலேசியாவில் அனுமதியின்றி கட்டப்பட்ட எந்தவொரு ஆலயமும் மாற்று நிலம் வழங்கப்படாமல் அகற்றப்படாது என்பது அரசின் கொள்கை. ஆனால், அரசாங்கம் வழங்கும் மாற்று நிலத்தையும், சட்டப்பூர்வ பட்டாவையும் ஏற்க மறுத்தால், எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் போது ஏற்படும் விளைவுகளுக்குச் சம்பந்தப்பட்ட ஆலய நிர்வாகமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்," என்று எச்சரித்தார்.

இறுதி முடிவை மறுபரிசீலனை செய்ய மதுரை வீரன் ஆலயத்திற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தின் தீர்மானங்கள் அனைத்தும் ஆலயங்களுக்கு எழுத்துப்பூர்வமாக அனுப்பப்படும் என்றும், கூட்டத்திற்குப் பின் டத்தோ சிவநேசன் புதிய நில ஒதுக்கீட்டுப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.










