ஈப்போ, புந்தோங்கில் கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த மோதலில் 25 வயது இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீசார் மேலும் மூன்று பேரைக் கைது செய்துள்ளது.
இதன் மூலம் இந்த கொலை சம்பவம் தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.
இன்று காலை மெங்கலெம்பு பகுதியில் இந்த புதிய கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் நூர் ஹிஷாம் நோர்டின் தெரிவித்தார். முன்னதாக, ஈப்போ மற்றும் சுங்கை சிப்புட் பகுதிகளில் முக்கிய சந்தேக நபர் உட்பட நால்வர் பிடிபட்டனர்.
இரு கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட வாக்குவாதம் மற்றும் மோதலே இந்த கொலைக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த மற்ற இருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் கொலை, கடுமையான காயம் ஏற்படுத்துதல் மற்றும் ஆயுதங்களுடன் கலகம் செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது என்று நூர் ஹிஷாம் நோர்டின் விளக்கினார்.








