மலாக்கா, பிப்ரவரி.09-
மலாக்காவில் சக மாணவர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஒரு தொழிற்கல்வி கல்லூரியைச் சேர்ந்த எட்டு மாணவர்கள் போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் கல்வி பயிலவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரஹ்மாட் மரிமான் தெரிவித்துள்ளார்.
மலாக்கா கல்வி, உயர்கல்வி மற்றும் மத விவகாரக் குழுவின் தலைவரான அவர் கூறுகையில், அனைத்து ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் தற்போது கல்வி அமைச்சின் கண்காணிப்பில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட மாணவர் மீது ஏற்பட்ட அதிருப்தியே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என நம்பப்படுகிறது என்று அவர் இன்று தெரிவித்தார்.
உணவருந்தும் நேரத்தில் வரிசையை மீறிச் சென்றதற்காக, அந்த மாணவர் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை அலோர் காஜா போலீஸ் தலைமையகத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








