கோலாலம்பூர், டிச.10-
ஆன்லைன் மூலமாக நிதி திரட்டல் மோசடிகள் பரவலாக காணப்படுவதற்கு அவற்றை ஒடுக்குவதற்கு முறைப்படுத்தப்பட்ட உறுதியான சட்டங்கள் இல்லாததே முக்கிய காரணமாகும் என்று போலீஸ் துறை கூறுகிறது.
ஆன்லைன் நிதி வசூலிப்பை முறைப்படுத்த பிரத்தியேகமான சட்டங்கள் இல்லாதது, போலீசார் தற்போது எதிர்நோக்கி வரும் முக்கிய சவாலாகும் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றத்தடுப்பு போலீஸ் இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமட் யூசோப் தெரிவித்தார்.
உறுதியான சட்டங்கள் இல்லாதது, அத்தகைய நடவடிக்கைகளை கண்காணிப்பதிலும், நடவடிக்கை எடுப்பதிலும் தாங்கள் பெரும் சிரமங்களையும், சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மூன்று அறநிறுவனங்களுக்கு நன்கொடைகள் திரட்டுவதாக கூறிக்கொண்ட ஓர் ஆன்லைன் மோசடி கும்பலைச் சேர்ந்த 55 பேரை கடந்த ஆண்டு கைது செய்தது மூலம் மிகப்பெரிய மோசடிக்கும்பலை தாங்கள் முறியடித்ததாக டத்தோஸ்ரீ ரம்லி நினைவுகூர்ந்தார்.








