புக்கிட் மெர்தாஜாம், டிசம்பர்.14-
ஆசிரியர்களின் மிகப் பெரிய சுமையாகக் கருதப்பட்ட SPLKPM எனப்படும் பயிற்சி மேலாண்மை அமைப்பை அடுத்த ஆண்டு முதல் முழுமையாக நீக்குவதாக கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் அறிவித்துள்ளார். இந்தப் பரபரப்பான முடிவின் மூலம், ஆண்டுதோறும் பயிற்சி நாட்கள், கடன் புள்ளிகள் சேகரித்தல், டிஜிட்டல் சான்றிதழ்கள் பெறுதல் போன்ற நிர்வாகப் பதிவேடுகளிலிருந்து ஆசிரியர்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்கிறது.
கற்பித்தல் பணியில் ஆசிரியர்கள் முழுமையாக ஈடுபடுவதை உறுதிச் செய்யும் வகையிலும், அவர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையிலும் அமைச்சு தொடர்ச்சியாக எடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இஃது அமைந்துள்ளது. இந்தப் பணிச் சுமை குறைப்பு நடவடிக்கை, ஆசிரியர்களுக்குக் கூடுதல் நம்பிக்கையளித்து, மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்கான வழியைத் திறந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை என ஃபாட்லீனா நம்பிக்கை தெரிவித்தார்.








