கோலாலம்பூர், நவம்பர்.22-
தனது முன்னாள் கணவரிடமிருந்து தனது மகளை மீட்பது தொடர்பில் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயிலுடன் இந்திரகாந்தி சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கு இன்னும் 3 வாரங்களுக்குள் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பு நடைபெறுவற்கான உத்தரவாதத்தைச் சட்டச் சீர்திருத்ததிற்கான பிரதமர் துணை அமைச்சர் எம். குலசேகரன் வழங்கியள்ளார் என்று இந்திராகாந்தி நடவடிக்கை குழுவின் தலைவர் அருண் துரைசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக துணை அமைச்சர் குலசேரன், அரச மலேசிய போலீஸ் படையுடன் விவாதிப்பார் என்று அவர் குறிப்பிட்டார்.
16 ஆண்டுகளுக்கு முன்பு தனது முன்னாள் கணவர் கே. பந்மநாபன் என்ற முகமட் ரிடுவான் அப்துல்லாவால் தூக்கிச் செல்லப்பட்ட தனது மகள் பிரசன்னா டிக்ஷாவைக் கண்டுபிடிக்க போலீசார் துரிதம் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று மதியம் கோலாலம்பூர், சோகோ பேரங்காடியிலிருந்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் வரை இந்திராகாந்தி அமைதி ஊர்வலம் நடத்தினார்.
அந்த ஊர்வலத்தில் இந்திராகாந்திக்கு ஆதரவாக கலந்து கொண்ட துணை அமைச்சர் குலசேகரன் இந்த உறுதிமொழியை வழங்கியிருப்பதாக அருண் துரைசாமி தெரிவித்தார்.
தனது மகளின் விவகாரத்தில் போலீசார் அமைதி காத்து வருவது வருத்ததை அளிக்கிறது என்று இந்திராகாந்தி குறிப்பிட்டார். ஐஜிபி. இன்று தங்களைச் சந்திக்கவில்லை என்றாலும் மூன்று வாரத்திற்குள் அவரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறவில்லை என்றால் மீண்டும் ஒரு போராட்டம் நடைபெறும் என்று இந்திராகாந்தி சூளுரைத்தார்.
ஐஜிபி தங்களைச் சந்திக்காத நிலையில் பிற்பகல் ஒரு மணியிலிருந்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வாசலில் காத்திருந்த இந்திராகாந்தியும், அவரின் ஆதரவாளர்களும் பிற்பகல் 4.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டனர்.








