May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

விபத்தில் கடும் காயங்களுக்கு ஆளான இரு சிறார்களின் நிலவரத்தைக் கண்டறிந்தார் டாக்டர் லிங்கேஸ்வரன்

Share:

செபராங் ஜெயா, பிப்.20-

கடந்த செவ்வாய்க்கிழமை சுங்கை பாக்காப் – பட்டர்வொர்த் கூட்டரசு நெஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் கடும் காயங்களுக்கு ஆளான சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி மாணவன் 7 வயது டர்ஷன் மற்றும் அவரின் 5 வயது சகோதரி கவர்ஜித்தாவின் உடல் நிலையை மேலவை உறுப்பினர் டாக்டர் லிங்கேஸ்வரன், இன்று மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

செபராங் ஜெயா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள சிறுவன் டர்ஷனைப் பார்வையிட்ட டாக்டர் லிங்கேஸ்வரன், அந்த சிறுவனுக்கு முதலாவது அறுவை சிகிச்சை முடிவுற்று, தொடர்ந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார்.

அவரின் தங்கை கவர்ஜித்தா தற்போது பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கும் முதலாவது அறுவை சிகிச்சை முடிவுற்றது. தற்போது தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

மருத்துவ உபகரண வசதி சிக்கல் தொடர்பில் டர்ஷனும், விரைவில் செபராங் ஜெயா மருத்துவமனையிலிருந்து பினாங்கு மருத்துவமனைக்கு இடம் மாற்றப்படுவார் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

அவ்விரு சகோதர, சகோதரிகளின் உடல் நிலை முன்னேற்றம் குறித்து தாம் அணுக்கமாக கண்காணித்து வருவதாகவும், அவர்களுக்கு மிகச்சிறந்த மருத்துவ வசதிகள் கிடைப்பதை எல்லா நிலைகளிலும் தாம் உறுதி செய்யப் போவதாக செபராங் ஜெயா மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில் டாக்டர் லிங்கேஸ்வரன் இதனைத் தெரிவித்தார்.

அதேவேளையில் இவ்விரு உடன்பிறப்புகளின் உடல் நிலை குறித்து தவறான தகவல்களை பகிர வேண்டாம் என்று பொது மக்களை டாக்டர் லிங்கேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

நமது அரசு மருத்துவமனைகள், தற்போது நவீன வசதிகள் மற்றும் உப சிறப்பு நிபுணத்துவத்தைக் கொண்டு இருப்பதையும் டாக்டர் லிங்கேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.

இதில் குழந்தை எலும்பியல் சிகிச்சை சிறப்பு பிரிவும் அடங்கும். இது போன்ற கடுமையான காயம் ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் அரசு மருத்துவமனைகளின் இந்த சிறப்பு பிரிவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நிபுணத்துவம் வாய்ந்த ஊழியர்கள் மற்றும் அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்துடன், நோயாளிகள், தனியார் மருத்துவமனைக்குச் செல்லாமல் அரசு மருத்துவமனைகளில் உயர்தர சிகிச்சையைப் பெற்று வருவதையும் டாக்டர் லிங்கேஸ்வரன் விளக்கினார்.

Related News