கோலாலம்பூர், பிப்ரவரி.16-
வியாபாரத் தோல்வி, பொருளாதார நெருக்கடி அல்லது மோசடிகளால் நிதி நெருக்கடியில் சிக்கியவர்களுக்கு திவால் நிலை என்பது ஒரு நிரந்தர தண்டனையாகப் பார்க்கப்படக்கூடாது என்று சட்ட சீர்திருத்தத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் வகையில், இந்த ஆண்டு முதல் 'Fast Track” எனும் விரைவு வழிமுறையை அறிமுகப்படுத்தி, அரசின் 'இரண்டாவது வாய்ப்பு' கொள்கையை வலுப்படுத்த உள்ளதாக அவர் கூறினார்.
இந்த 'பாஸ்ட் டிராக்' திட்டத்தின் கீழ், நான்கு முக்கிய பிரிவினருக்கு திவால் நிலையிலிருந்து விரைவாக விடுதலையளிக்க முன்னுரிமை வழங்கப்படும் என்பதையும் அஸாலினா தெளிவுப்படுத்தினார்.
தனித்து வாழும் தாயார் அல்லது தந்தை, குறுங்கடன் தொழில்முனைவோர், நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களால் பாதிக்கப்பட்ட வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம் அளிக்க இந்தத் திட்டம் வரையப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஒரு நேர்மையான தோல்வி என்பது ஆயுள் தண்டனையாக மாறிவிடக்கூடாது. தனிநபர்கள் மீண்டு வரவும், மீண்டும் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கவும், அவர்களின் கண்ணியத்தை மீட்டெடுக்கவும் நாம் வழிவகை செய்ய வேண்டும்," என்று இன்று நடைபெற்ற 'Fast Track” திட்டத்தின் தொடக்க விழாவில் பேசும்போது அஸாலினா குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கை பொறுப்பற்ற முறையில் கடன் வாங்குவதை ஊக்குவிப்பதற்கல்ல, மாறாக உண்மையிலேயே உதவி தேவைப்படுபவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கே என்று அவர் தெளிவுபடுத்தினார். மேலும், கடன் ஆலோசனை மற்றும் கடன் மேலாண்மை நிறுவனம் மூலம் நிதி மேலாண்மை குறித்த வழிகாட்டல்களும் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.








