மதுபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 42 வயது உள்ளூர் பெண்ணுக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 13,000 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது. கோலாலம்பூர், ஜாலான் கெந்திங் கிள்ளான் சந்திப்பில் நேற்று இரவு சுமார் 8.22 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், சம்பந்தப்பட்ட பெண்மணி தனது பிஎம்டபிள்யூ காரைச் செலுத்திச் சென்றபோது, சிவப்பு விளக்கை மீறிச் சென்று பச்சை விளக்கில் நேராக வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளார்.
இந்த விபத்தில் 22 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சொற்ப காயமடைந்தார். விபத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட சோதனையில், அந்தப் பெண்ணின் உடலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாக மது கலந்திருப்பது கண்டறியப்பட்டது.
அது மாது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அவருக்கு ஒரு நாள் சிறைத்தண்டனை, 13,000 ரிங்கிட் அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தத் தடை விதித்துத் தீர்ப்பளித்தது.








