ரவாங், பிப்ரவரி.12-
ரவாங்கில் நேற்று இந்து ஆலயம் ஒன்றில் நுழைந்து, அதன் ஒரு பகுதியைச் சேதப்படுத்தியதாக நம்பப்படும் நான்கு பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆலய நிர்வாகத்திடம் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தாமல், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்காமல், அவர்கள் ஆலயத்தின் ஒரு பகுதியை சேதப்படுத்தியுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் ஷாஸெலி கஹார் தெரிவித்துள்ளார்.
மேலும், 26 வயது முதல் 39 வயதுடைய அந்த 4 சந்தேக நபர்களிடமிருந்து, இடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட இயந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், அவர்கள் மீது வழிபாட்டுத் தலத்திற்கு சேதம் விளைவித்தது, அமைதியைக் சீர்குலைக்கும் நோக்கத்துடன் அவமதிப்பு செய்தது, அத்துமீறி ஆலயத்திற்குள் நுழைந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், ஊகங்களின் அடிப்படையில் பொதுமக்கள் யாரும் தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும், பொது அமைதியை சீர்குலைக்கும் எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்றும் ஷாஸெலி கஹார் எச்சரித்துள்ளார்.
அதே வேளையில், இந்த விவகாரத்தில் முறையான, வெளிப்படையான விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக, உரிய அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்படுவது குறித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகின்றது.
கடந்த வாரம், சனிக்கிழமை சட்டவிரோத வழிபாட்டுத்தலங்களுக்கு எதிரான சில தரப்பினரின் பேரணி அதன் முக்கிய உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.








