கோலாலம்பூர், மே.03-
வெளிநாடுகளில் பணியாற்றும் மலேசியக் குடிமக்களுக்கு சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோ பாதுகாப்பினை விரிவாக்கம் செய்யும் வகையில், 2017-ஆம் ஆண்டு சுயதொழில் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது. இந்தச் சட்டத் திருத்த மசோதா வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

இன்று புக்கிட் ஜாலில், Unifi Arenaவில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான பணியிடப் பாதுகாப்பு, ஆரோக்கிய தினக் கொண்டாட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைப் பகிர்ந்து கொண்டார். அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த மசோதா நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வரப்படும் என்றும், ஒப்புதல் பெற்ற உடனேயே இது நடப்புக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டம் குறித்து அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், தொழிலாளர்களின் பாதுகாப்பும் ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது என்பதால், இந்த ஆண்டிற்குள்ளேயே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். குறிப்பாக சிங்கப்பூருக்கு நாள்தோறும் வேலைக்குச் செல்லும் சுமார் 480 ஆயிரம் மலேசியர்களுக்கு இத்திட்டம் பெரும் பாதுகாப்பாக அமையும். கடந்த ஆண்டில் மட்டும் இத்தகைய எல்லை தாண்டிய தொழிலாளர்களிடையே 54 உயிரிழப்பு விபத்துகள் பதிவாகியுள்ளன என்பதையும் சுட்டிக் காட்டிய அமைச்சர், இத்திட்டத்தில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க பெர்கேசோ போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேம்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மலேசியர்கள் எங்கு வேலை செய்தாலும் அவர்களுக்கு நியாயமான சமூகப் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் என அவர் வலியுறுத்தினார். முன்னதாக, கடந்த மே 1-ஆம் தேதி நடைபெற்ற தேசிய தொழிலாளர் தின விழாவில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த பாதுகாப்பு விரிவாக்கத் திட்டத்தை முதன் முதலில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், இன்று அறிமுகப்படுத்தப்பட்ட 2026-ஆம் ஆண்டுக்கான பணியிடப் பாதுகாப்பு, ஆரோக்கிய வழிகாட்டுதலில், கட்டுமானத் துறை கிக் (GIG) தொழிலாளர்களின் மனநலம் சார்ந்த அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக மனிதவளத் துணையமைச்சர் டத்தோ கைருல் ஃபிர்டாவுஸ் அக்பார் கான் தெரிவித்துள்ளார்.








