கிள்ளான், நவ. 29-
கனத்த மழையில் கிள்ளான், மேரு பட்டணம் மற்றும் பிரதான சாலைகள் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு குட்டித் தீவைப் போல மேரு பட்டணத்தை வெள்ள நீர் சூழ்ந்துக்கொண்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
எந்தவொரு விரும்பத்தகாத சம்பவம் நிகழவில்லை என்ற போதிலும் வாகனமோட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
மேருவில், காப்பார் நகரை நோக்கி செல்லும் ஜாலான் ஹம்ஸா அலாங், ஜாலான் காசிம் உட்பட கம்போங் புக்கிட் காப்பாரை நோக்கிச் செல்லும் ஜாலான் கெம்பாஸ், ஜாலான் ஹம்பா, ஜாலான் புக்கிட் பஹாகியா மற்றும் ஜாலான் கோப்பி ஆகியவை வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மேருவிலும், புக்கிட் காப்பாரிலும் வெள்ளம் சூழ்ந்த நிலையில் பல கடைகள் மூடப்பட்டுள்ளன. மேருவில் வெள்ளத்தின் மோசமான நிலையை தெரிவிக்கும் வகையில் மேருவாசிகள், வெள்ளப்படங்களை தங்கள் முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
சிலாங்கூர் மாநில வெள்ளப் பேரிடர் மீதான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹல்மி கூறுகையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றம் செய்வதற்கு இதுவரை இரண்டு நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.








