கோலாலம்பூரில் கடன் கொடுத்த கும்பல் ஒன்றால், 62 வயது மூதாட்டி ஒருவர் உணவகத்திற்குள் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது கணவரின் மருத்துவச் செலவுகளுக்காக, திருமதி வாங் என்ற அந்தப் பெண் சில நபர்களிடம் கடன் வாங்கியுள்ளார். கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், அந்த நபர்களுக்குச் சொந்தமான உணவகத்திற்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
அங்கு சென்றவுடன் உணவகத்தின் ஷட்டர்கள் மூடப்பட்டு, அங்கிருந்த இளைஞர்கள் அந்தப் பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அவர் நிலைகுலைந்து கீழே விழுந்த பிறகும், மார்பில் எட்டி உதைத்துக் கொடூரம் இழைத்துள்ளனர். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்தத் தாக்குதலை, அங்கிருந்த அவரது கணவரால் தடுக்க முடியாமல் அடியாட்கள் கட்டிப்போட்டுள்ளனர்.
காயங்களால் நடக்கக் கூட முடியாத நிலையில் இருந்த அந்தப் பெண், பின்னர் கணவரால் மீட்கப்பட்டார். தற்பொழுது மலேசிய மனிதாபிமான அமைப்பின் உதவியுடன் அவர் போலீஸ் துறையில் புகார் அளித்துள்ளார். 'ஒரு முதியவள் என்றும் பாராமல் இவ்வளவு கொடூரமாக நடந்துகொண்டார்களே' என அவர் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். போலீஸ் துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








