கோலாலம்பூர், பிப்ரவரி.22-
மலேசிய அரசாங்கத்திற்கும் ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தான 1.1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் நிதி அமைச்சு, அனைத்துலக வர்த்தகத் தொழில் அமைச்சு ஆகியவற்றின் ஒப்புதல் இன்றி அவசர அவசரமாகச் செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இது குறித்த விளக்கத்தைப் பெற பொருளாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பல சாட்சிகள் விரைவில் அழைக்கப்பட உள்ளதாக ஆணையத்தின் நம்பத் தகுந்த வட்டாரம் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களைச் சேகரித்துள்ள அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அமைச்சிலிருந்து ஓய்வு பெற்ற சில நபர்களுக்கு அந்த வெளிநாட்டு நிறுவனத்தில் உயர் பதவிகள் வழங்கப்பட்டிருப்பது குறித்தும் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் அத்தரப்பு கூறியதாக BULETIN TV3 செய்தி வெளியிட்டுள்ளது.








