மலேசியாவின் புகழ்பெற்ற புது சிறைச்சாலையின் சுவர்களில் உலக சாதனை படைத்த ஓவியங்களை வரைந்த முன்னாள் கைதி கோங் யென் சோங், தனது 78-வது வயதில் காலமானார். கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த இவரது வாழ்க்கை, இறுதியில் பெரும் சோகத்தில் முடிந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 20-ம் தேதி காலமான இவரது உடல், பினாங்கு மருத்துவமனை சவக்கிடங்கில் எவராலும் உரிமை கோரப்படாமல் 50 நாட்களாகத் தனித்து விடப்பட்டது.
இறுதியாக, ஒரு தன்னார்வ நிறுவனம் மற்றும் அவரது நண்பர் வூ கை மின் ஆகியோரின் முயற்சியால், கடந்த ஏப்ரல் 10-ம் தேதி உடல் மீட்கப்பட்டு நேற்று இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.
1984-ல் புது சிறையில் 266 மீட்டர் நீளமுள்ள பிரம்மாண்ட ஓவியத்தை வரைந்தவர் கோங். ஒரு சிறைச்சாலையின் முழு சுவரையும் தனி ஒரு ஆளாக ஓவியங்களால் நிரப்பிய முதல் கலைஞர் இவர்தான். ஆனால், 2010-ல் அந்த சிறைச்சாலை இடிக்கப்பட்டபோது, இவரது சாதனையும் சிதைக்கப்பட்டது.
தனது கடைசி காலத்தில் தேவாலயத்தின் உதவியுடன் வறுமையில் வாழ்ந்த கோங், "வாழ்க்கையில் சாதனை படைத்து தான் மரணத்திற்குப் பின் நீண்ட நாட்கள் உரிமை கோரப்படாத உடல் என்ற மற்றொரு வேதனையான சாதனையையும் படைத்துவிட்டதாக" அவரது நண்பர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.














